அமீரக செய்திகள்

துபாயில் நாளை முதல் இந்த ஐந்து விதிமீறல்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம்.. விதிகளை கடுமையாக்கும் அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, சிகப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது மற்றும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது ஆகியவை கடுமையான போக்குவரத்து குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் இந்த குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அந்த வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம்களை அபராதமாக செலுத்த வேண்டும் என்பதும் அமீரகத்தின் சில எமிரேட்டுகளில் நடைமுறையில் உள்ளது.

தற்போது இது போன்ற விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக துபாய் அரசும் போக்குவரத்து சட்டங்களில் தொடர் திருத்தங்களை மேற்கொண்டு கடுமையான அபாரதங்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட சட்டம் நாளை ஜூலை 6, வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

துபாய் அரசின் இந்த திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டத்தின்படி, பின்வரும் ஐந்து மீறல்களுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அந்த வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட ஐந்து விதி மீறல்கள்:

  1. நடைபாதை சாலைகளில் பொழுதுபோக்கு மோட்டார் சைக்கிள்களை ஓட்டுதல்.
  2. வாகனத்தை கவனக்குறைவாக அல்லது மற்ற உயிர்கள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஓட்டுதல்.
  3. சிவப்பு விளக்கில் நிற்காமல் வாகனத்தை ஓட்டுதல்.
  4. போலியான, ஜோடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அல்லது சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட நம்பர் பிளேட்டைக் கொண்டு வாகனத்தை ஓட்டுதல்.
  5. வேண்டுமென்றே பொலிஸ் வாகனத்தின் மீது மோதுதல் அல்லது வேண்டுமென்றே சேதப்படுத்துதல்.

சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விடுவிக்க 50,000 திர்ஹம்களை அபராதமாக செலுத்த வேண்டும் எனும் நடைமுறை அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!