UAE: புதிதாக திறக்கப்படவுள்ள பிரமிக்க வைக்கும் துபாய் முதலை பூங்கா..!! பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் தேதி வெளியீடு..!!
பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்துவதற்கு துபாயில் புதிதாக திறக்கப்படவிருக்கிறது துபாய் முதலை பூங்கா (dubai crocodile park(. சிறிய முதலைகள் முதல் பெரிய முதலைகள் வரை அனைத்து வயதிலும் உள்ள சுமார் 250 நைல் முதலைகளுக்கு (nile crocodile) இருப்பிடமாக அமைக்கப்பட்டுள்ள இந்த முதலை பூங்கா எதிர்வரும் ஏப்ரல் 18 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பூங்காவானது தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், துபாய் முதலை பூங்காவுக்கான டிக்கெட்டுகளை பூங்கா நுழைவாயிலில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்குள் முதலைகளின் வசதிக்காக 20,000 சதுர மீட்டருக்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை வாழும் சூழலுக்கு ஏற்ப ஆண்டு முழுவதும் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் நீர் மற்றும் பார்வையாளர்களுக்கு உயர்தர பாதுகாப்பு அமைப்பு போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் நீருக்கடியில் உள்ள அற்புதமான உயிரினங்களை பல்வேறு கோணங்களில் இருந்து பார்வையிடும் வசதியும் உள்ளது. குறிப்பாக, பார்வையாளர்கள் கடந்து செல்லும் பாதை முழுவதும் கல்வி பேனல்கள், பள்ளிப் பயணங்களுக்கான பிரத்யேகமாகத் தொகுக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, துபாய் முதலை பூங்காவின் மையத்தில் நல்வாழ்வு மற்றும் கல்வி உள்ளது என்றும் பூங்காவிற்கு முதலைகள் கொண்டு வரப்பட்டதிலிருந்து இனப்பெருக்க செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் பூங்காவின் கண்காட்சி கண்காணிப்பாளர் டாரின் கிளேர் கூறியுள்ளார்.