மத வெறுப்பாளர்களால் மீண்டும் எரிக்கப்பட்ட புனித குர்ஆன்.. கடும் கண்டனம் தெரிவித்த அமீரக அரசு..!!
டென்மார்க் நாட்டில் உள்ள மத வெறுப்பாளர்களால் இஸ்லாமியர்களின் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு டென்மார்க் அரசாங்கம் பொறுப்பேற்குமாறும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அமீரக வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததுடன், அமைதி மற்றும் பாதுகாப்பை எதிர்மறையாக பாதிக்கும் வெறுப்பு பேச்சுகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, மேலும், இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு ஆதரவாக கருத்துச் சுதந்திரத்தை நியாயப்படுத்துவதையும் அமைச்சகம் நிராகரித்துள்ளது.
மேலும், சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றின் உலகளாவிய கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில், மதச் சின்னங்களுக்கு மதிப்பளித்து, தூண்டுதல் மற்றும் துருவமுனைப்புகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை அடைய இந்தக் கோட்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் டென்மார்க் அரசாங்கத்தை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ஸ்வீடன் நாட்டிலும் சில வாரங்களுக்கு முன்பு மத வெறுப்பாளர்களால் இதே போன்று புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, ஜூலை 21 ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சகம், அமீரகத்திற்கான ஸ்வீடன் தூதரகத்தின் பொறுப்பாளரை வரவழைத்து, ஸ்வீடனில் மீண்டும் மீண்டும் நடக்கும் இது போன்ற தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான உத்தியோகபூர்வ எதிர்ப்புக் குறிப்பை அவரிடம் அளித்தது.
மேலும், இதுபோன்ற செயல்களை தொடர்ந்து அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஸ்வீடன் தனது சர்வதேச பொறுப்புகளை புறக்கணித்துவிட்டதாகவும், இந்த விஷயத்தில் சமூக நல்லினத்துக்கு மரியாதை இல்லாததை இந்த செயல் நிரூபித்துள்ளதாகவும் ஐக்கிய அரபு அமீரக அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.