பார்சல் வந்துள்ளதாக கூறி நூதன முறையில் மெசேஜ் அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்.. எச்சரிக்கை விடுத்த ஓமான் அதிகாரிகள்..!!..
ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் பழக்கம் தற்பொழுது மக்களிடையே அதிகரித்து வருகின்றது. கடையில் சென்று வாங்க தேவையில்லை மற்றும் வீட்டிற்க்கே நேரடியாக வந்து விடுகிறது என்ற காரணத்தால் பெரும்பாலான மக்கள் இந்த ஷாப்பிங் முறையினை பின்பற்றுகின்றனர். ஆனால் சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இப்பேற்பட்ட சம்பவம் ஓமன் நாட்டில் தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்று செய்தி வெளியாகி உள்ளது.
நீங்கள் செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் உங்களது கொரியர் பேக்கேஜ் எங்களிடத்தில் உள்ளது என்று கொரியர் நிறுவனங்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற கூரியர் சேவை மோசடி சம்பவங்கள் ஓமான் மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் பதிவாகி வருகிறது.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் கூற்றுப்படி, மக்களிடமிருந்து கிரெடிட் கார்டுகள் போன்ற விவரங்களை அறிவதற்காக இந்த மோசடி வழியினை பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளது.
இதேபோன்று போலியான கூரியர் சேவைகளிலிருந்து தங்களுக்கு மின்னஞ்சல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் வந்ததாக ஓமானில் உள்ள பலர் கூறியுள்ளனர். சிலர் இதனை நம்பி பணத்தையும் செலுத்தியுள்ளனர். இது போன்று வரும் மெசேஜ்களில் லிங்குடன் சேர்த்து அனுப்புகின்றனர்.
மக்கள் அந்த லிங்கினை கிளிக் செய்யும்பொழுது அது வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்று மக்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை திருடி அவர்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்.
எனவே இது போன்று மெசேஜ்கள் வந்தால் மக்கள் முதலில் உண்மையாகவே கொரியர் கம்பெனியிலிருந்து வந்துள்ளதா என்பதை கஸ்டமர் கேர் நம்பரில் போன் செய்து விசாரித்து பின்பு அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்பொழுது ஆன்லைன் சேவை அதிகமாகி உள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இதை கையாள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி ஏதேனும் போலியான வகையில் உங்களது பணம் பறிக்கப்பட்டால் உடனே காவல்துறை அதிகாரியிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.