கோடை காலத்தின் தாக்கம் பஹ்ரைனில் எதிரொலி… இதுவரை இல்லாத அளவில் அதிக அளவு அதிகரித்த மின்சார நுகர்வு விகிதம்..!!
பஹ்ரைனில் முன்பு இல்லாத வகையில் அதிகளவு மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்பு இல்லாத வகையில் கோடை வெப்பம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளதால் மக்கள் அதிக அளவு ஏர் கண்டிஷனிங் பயன்படுத்தும் நிலையில் உள்ளதால் மின் நுகர்வு அதிகமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் கடந்த வியாழன் அன்று மின்சார நுகர்வு விகிதம் 3,798 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது என்று மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக 3,708 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் பதிவான நிலையில் அந்த அளவானது தற்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.
மனாமா மாநிலத்தில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) வரை எட்டியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த அதிக வெப்பநிலையானது மின்சார நுகர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்.
கோடைகாலத்தை பொருத்தவரை பெரும்பாலும் மக்கள் வீட்டிற்குள்ளே கழிப்பதால், அதிக வெப்பநிலை காரணமாக மின்சார நுகர்வு அதிகம் ஏற்பட்டாலும், மக்கள் தேசிய வளங்களை பாதுகாக்க உதவும் வகையில் நீர் மற்றும் மின்சாரத்தை கவனமாக உபயோகிக்க வேண்டும் என்று மின்சார ஆணையம் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோடைகாலத்தினை பொருத்தவரை, அனைத்து வளைகுடா நாடுகளிலும் மின் நுகர்வுவிகிதமானது சற்று அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.