அமீரகவாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி… பாஸ்போர்ட் , விசா, சான்றழிப்பு சேவைகளை மேம்படுத்த 2024 ஆம் ஆண்டு முதல் புது திட்டம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த அமீரக குடியிருப்பாளர்கள், வரும் 2024 ம் ஆண்டு முதல் புதிய ஒருங்கிணைந்த மையத்தின் கிளைகளில் இருந்து பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவைகளைப் பெறுவார்கள் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசின் இந்த புதிய நடவடிக்கையின் கீழ், விசா சேவைகள் உட்பட அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட தூதரக சேவைகளை மறுசீரமைப்பதற்கு அமீரகத்திற்கான இந்திய தூதரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அதன் சேவைகளை நெறிப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், மேம்பட்ட செயல்திறன் மற்றும் எளிதான அணுகல் ஆகியவற்றை உறுதி செய்யவும் புதிய மையங்களை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இதற்காக, இது போன்ற சேவைகளை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு இடையே விரைவில் ஏலம் விடப்படவிருப்பதாகவும், இந்த ஏலத்தில் பங்கேற்க விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் இந்த புதிய நடவடிக்கையின் கீழ், பாஸ்போர்ட்-விசா (CPV) சேவைகள், சான்றளிப்பு (attestation) சேவைகள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கான பிற முக்கிய சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதற்கான முன்மொழிவுக்கான கோரிக்கையையும் (RFP) தூதரகம் வெளியிட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமீரகத்தில் வசித்து வரும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு விரைவாகவும், வெளிப்படையாகவும் சேவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த புதிய சேவையானது நிறைவேறும் பட்சத்தில், இது அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.