புதிய அவதாரம் எடுத்திருக்கும் கொரோனா வைரஸ்… உம்ரா வழிபாட்டாளர்கள் முக கவசம் அணியுமாறு சவூதி அரசு அறிவுறுத்தல்..!!
உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை மீண்டுள்ளது. மிக குறைந்த சதவீதத்திலேயே மக்கள் பாதிக்கப்படுவதால் கொரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து வருகிறோம். இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் ஒரு சில நாடுகளில் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனையொட்டி சவூதி அரேபிய அரசு இந்த புதிய வகை மாறுபாட்டிற்கு எதிராக புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் பொது பாதுகாப்பு ஆணையம், உம்ரா யாத்ரீகர்கள் புனித தலங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. உலகளவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்த உலகளாவிய அறிக்கைகளின் மத்தியில் இந்த ஆலோசனையை வகுத்துள்ளது.
EG.5 என்று அழைக்கப்படும் ஓமிக்ரான் வைரஸின் துணைவரிசையான Eris அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உட்பட 51 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்கும் பொழுது கொரோனாவை காட்டிலும் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும் மரபியல் அம்சங்கள், நோயெதிர்ப்புத் தப்பிக்கும் பண்புகள் மற்றும் வளர்ச்சி விகித மதிப்பீடுகளின் அடிப்படையில், EG.5 உலகளவில் பரவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, சவுதி அரேபியாவில் இருக்கும் உம்ரா வழிபாட்டாளர்கள் தங்களையும் மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முக கவசங்களை அணியுமாறு சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அதிகாரப்பூர்வமான சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: “மக்கா, மதீனா மற்றும் இரண்டு புனித மசூதிகளில் முக கவசம் அணிவது, உங்களையும் மற்றவர்களையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இது குறித்து கூறும் பொழுது புதிய மாறுபாட்டின் பரவலை அமைப்பு கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸ் அதிகரித்தால் திடீர் உயிரிழப்பு ஏற்படலாம் என்பதால் அரசு தீவிரமாக நோயின் தன்மையினை கண்காணித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, கோவிட் -19 நோய் தொற்றை பொறுத்தவரை உலகளவில் பதிவான வழக்குகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரக்கணக்கின்படி, கடந்த மாதத்தில், 25 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர், மேலும் 11 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.