நாட்டிற்கு வெளியே இருந்தாலும் இனி ரெசிடென்சி மற்றும் வொர்க் பெர்மிட்டை எளிதாக புதுப்பிக்கலாம்… புது சேவையை அறிமுகப்படுத்திய பஹ்ரைன்..!!
பஹ்ரைனில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பஹ்ரைன் நாட்டை விட்டு வெளியில் இருக்கும் பொழுதும் தங்களுடைய பணி அனுமதிகளை ஆன்லைனில் புதுப்பிக்கும் விதமாக புது சேவையினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் தேசிய, பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் விவகாரங்களுக்கான (Nationality, Passports and Residence Affairs-NPRA) துணைச் செயலாளர் ஷேக் ஹிஷாம் பின் அப்துல்ரஹ்மான் அல் கலீஃபா, இது குறித்து கூறும் பொழுது வணிக மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்கிய இந்தச் சேவையானது, தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA-Labour Market Regularly Authority) ஒருங்கிணைப்புடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி ரெசிடென்சி பெர்மிட்டை ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும் எனில் பஹ்ரைனின் நேஷனல் போர்ட்டல் வழியாக சேவை வழங்கப்படும் எனவும், தொழிலாளர்களின் வொர்க் பெர்மிட் புதுப்பிக்கப்பட வேண்டுமானால் வெளிநாட்டினர் மேலாண்மை அமைப்பு அல்லது அதிகாரப்பூர்வ LMRA சேனல்கள் மூலம் புதுப்பிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலாளர்கள் நலனை மேம்படுத்தும் நவீன மயமாக்கப்பட்ட இந்த சேவையானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றது எனவும் இதை ஒருங்கிணைத்தமைக்காக LMRAவை பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தச் சேவையானது, பஹ்ரைனுக்கு வெளியே தங்கள் ஊழியர்களின் பணி அனுமதிப் பத்திரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முதலாளிகளை அனுமதிக்கும் என்றும், புதுப்பிக்கும் செயல்முறை காலாவதி தேதிக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேவை மூலம் பல வேலைகள் விரைவு படுத்தப்படுவதால், கால அவகாசம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வொர்க் பெர்மிட் வழங்கும் முதலாளிகள், ஆன்லைன் மூலம் பெர்மிட்டின் கால அளவைத் தேர்ந்தெடுத்து, LMRA ஆல் உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் பணம் செலுத்தி வேலையை எளிதாக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.