அமீரக செய்திகள்

நடப்பு ஆண்டில் மட்டும் 33,500க்கும் மேற்பட்ட பயணத்தடைகளை விதித்துள்ள குவைத்..!! அபராதம் கட்டினாலே பயணம் செய்ய முடியும் என கட்டுப்பாடு..!!

குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டினர் போக்குவரத்து நிலுவை அபராதங்களை செலுத்திய பின்பு தான் நாட்டை விட்டு வெளியேற முடியும் என்று குவைத் அரசின் போக்குவரத்து அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில், அறிவிப்பு அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில் 66,000 தினார் நிலுவைத் தொகை வசூல் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியும் இருந்தன.

அரசு ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில், கடுமையான விதிமீறல்களான சாலைகளின் ரெட் சிக்னலை கவனிக்காமல் வாகனங்களை செலுத்துதல், ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு அபராதங்கள் நேரடியாக தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே செலுத்தப்பட வேண்டும் எனவும், விமான நிலையத்தில் செலுத்த அனுமதிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே அத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டியது இருந்தது. இவ்வகையான விதிமீறல்களில் ஈடுபட்டோர் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட தருணத்திலிருந்து 6 நிமிடங்களில் மீறல்களைப் பதிவுசெய்து வழங்குவதற்கான விரைவான முறையை GTD செயல்படுத்தியுள்ளது. பின்னர் அந்தந்த மீறுபவர்களுக்கு “Sahel” பயன்பாட்டின் மூலம் அவர்களின் தொலைபேசிகளுக்கு அறிவிப்புகள் அனுப்பப்படும். இந்த நவீன அணுகுமுறையானது அபராத தொகையினை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை தவிர, வழக்கமாக நடைபெறும் நடைமுறையின் படி உள்துறை அமைச்சகத்தின் பொதுப் போக்குவரத்துத் துறையானது, பிற வளைகுடா நாட்டவர்கள் உட்பட, புறப்படும் வெளிநாட்டவர்களிடமிருந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைத் தொடர்ந்து வசூலித்து வருகிறது. நீதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2023 முதல் பாதியில் மொத்தம் 33,569 பயணத் தடை உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயண தடை விதிக்கப்பட்டவர்கள், விமான நிலைய அலுவலகம் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்னர், திட்டமிடப்பட்ட அதே நேரத்தில் பயணத்தை தொடரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் நாட்களிலும் விமான நிலையங்களில் அபராத தொகை வசூலிக்கும் நடைமுறையானது கடுமையாக கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!