வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!! துபாயின் முக்கிய சாலையில் போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என RTA எச்சரிக்கை…!!
அமீரகத்தில் எதிஹாட் ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இந்த வார இறுதியில் துபாயின் ஷேக் சையத் சாலையுடன் அல் யாலாய்ஸ் இன்டர்சேஞ்சில் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து X தளத்தில் RTA வெளியிட்ட பதிவில், இன்று (செப்டம்பர் 23, சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை செப்டம்பர் 25 ஆம் தேதி வரை அல் யாலாயிஸ் சாலையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபி நோக்கி வரும் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் திசை அடையாளங்களை பின்பற்றுமாறும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் RTA வலியுறுத்தியுள்ளது.
எதிஹாட் ரயில் நெட்வொர்க்:
எதிஹாட் ரயில் நெட்வொர்க்கின் இரண்டாம் நிலையானது, அமீரகம் முழுவதும் அதாவது சவூதி அரேபியாவுடனான குவைஃபத் (Ghuwaifat) எல்லையில் இருந்து, அபுதாபி, கிஜாத், கலீஃபா போர்ட், ஜெபல் அலி போர்ட், துபாய், ஷார்ஜா, ராஸ் அல்-கைமா மற்றும் அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஃபுஜைரா வரை எமிரேட்களை இணைப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், எதிஹாட் ரயில் GCC-யின் அண்டை நாடுகளுடன் எல்லைகளைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது.