அபுதாபி: பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் 3 இலட்சம் திர்ஹம்ஸை வென்ற இந்தியர்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் சமீபத்திய வாராந்திர டிராவில் இந்தியாவை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் 300,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
அபுதாபியில் வசிக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் அஜீஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார். இவரது ஐந்தாண்டு கால முயற்சிக்கு தற்பொழுது வெற்றி கிடைத்துள்ளது. தானே சொந்தமாக டிக்கெட் வாங்குவதற்காக மூன்று முதல் நான்கு மாதங்களாக பணத்தை சேமித்து வைத்து வாங்குவதாக இவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “டிக்கெட் கட்டணத்தை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதனால், நானே டிக்கெட்டுகளை வாங்கி வருகிறேன். இப்போது நான் இறுதியாக வெற்றி பெற்றேன்” என கூறியுள்ளார்.
மேலும் “இந்தப் பணத்தை வங்கியில் கடனை அடைக்கப் பயன்படுத்துவேன். இந்தப் பணம் எனக்குப் பெரிதும் பயன்படும்” என்றும் அஜீஸ் கூறியுள்ளார். மார்ச் 5 ஆம் தேதி அபுதாபி சர்வதேச விமான நிலைய கவுன்டரில் அவர் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
இம்மாதம் 300,000 திர்ஹம் பரிசுத் தொகைக்கு மேலும் மூன்று வாராந்திர மின்னணு டிராக்கள் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கும் நேரலை டிராவின் போது வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசுக்கு 15 மில்லியன் திர்ஹம், இரண்டாம் பரிசுக்கு 1 மில்லியன் திர்ஹம் மற்றும் மூன்று ரொக்கப் பரிசுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.