அபுதாபியை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய 2 ஏவுகணைகளை தடுத்து வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அபுதாபியில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் திங்கள்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது பற்றி கூறுகையில் “தடுக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் துண்டுகள் அபுதாபியைச் சுற்றியுள்ள தனித்தனி பகுதிகளில் விழுந்ததால், தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான WAM வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஏவுகணைகள் ஹவுதி பயங்கரவாதக் குழுவால் அனுப்பப்பட்டதாக கூறுகிறது.
மேலும் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தஹ்ரான் அல் ஜனுப்பை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஏவுகணையையும் திங்கள்கிழமை அதிகாலை நகரின் தொழில்துறை மண்டலத்தில் தாக்கி வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கெய்ரோவில் அரபு லீக் நாடுகளின் குழு ஒன்று கூடி, ஹவுதியை பயங்கரவாதக் குழுவாக அறிவிக்குமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கு முன்னர் ஜனவரி 17 ஆம் தேதி திங்கட்கிழமை அபுதாபியில் நடந்த தாக்குதலில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.