பிரியாவிடையுடன் இன்று பூமிக்கு திரும்பும் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி..!! ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அமீரக மக்கள்..!!
”விண்வெளியே, இது ஒரு விடைபெறும் தருணம் அல்ல. ISS க்கு புதிய நோக்கத்துடனோ அல்லது தொலைதூர இலக்காகவோ நான் உங்களை பின்னர் சந்திப்பேன். எங்கள் கனவுகளை சாதனைகளாக மாற்றியதற்காக எனது அன்பான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி மற்றும் உங்கள் நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துங்கள். விரைவில் சந்திப்போம்.”
இதனை கூறியது வேறு யாருமல்ல. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விண்வெளிக்குச் சென்று 6 மாதம் தங்கியிருந்த விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாடி விண்வெளியில் இருந்து வெளியிட்ட இறுதி செய்தியாகும். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆறு மாத பணிக்குப் பிறகு இன்று செப்டம்பர் 3 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்க உள்ளார்.
இவர் விண்வெளியில் இருந்தபோது எண்ணற்ற தகவல்களை மக்களுடன் பகிர்ந்துள்ளார். அவற்றில் விண்வெளியில் இருக்கும் நபர்கள் எவ்வாறு தண்ணீர் அருந்துவார்கள் மற்றும் எவ்வாறு உணவு தயாரித்து சாப்பிடுவார்கள் போன்றவை குறித்து அவர் வெளியிட்ட வீடியோவானது உலகம் முழுவதும் வைரலாகி இருந்தது.
அத்துடன் பல முறை விண்வெளியில் இருந்து அமீரகம் மற்றும் பூமியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் குறிப்பாக உலகின் முதல்முறையாக விண்வெளியில் இருந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். “The Journey from the desert to the stars” எனும் பெயர் கொண்ட புத்தகமானது துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் எழுதப்பட்டதாகும்.
இந்நிலையில் தனது 6 மாத கால விண்வெளி பயணம் முடித்த சுல்தான் பூமிக்கு வருவதற்கு பயணிக்கவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் (எண்டேவர்) மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இடையே ஹாட்ச் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாடி, நாசா விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன் மற்றும் வூடி ஹோபர்க் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரே ஃபெட்யாவ் ஆகியோர் கொண்ட குழு இருப்பதாகவும் தற்பொழுது பூமிக்குத் திரும்பத் தயாராகி வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பிற்பகல் 3.05 மணிக்கு (ஐக்கிய அரபு அமீரகம் நேரம்) ISS இலிருந்து திறக்கப்பட உள்ளது. செப்டம்பர் 4, திங்கட்கிழமை காலை 8.17 மணிக்கு பூமிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு திரும்பும் சுல்தான் அல் நெயாடி, சாதாரண மக்களைப் போன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது மூன்று வாரங்களாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.