உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய துபாய் முனிசிபாலிட்டி நடத்தும் கள ஆய்வுப் பிரச்சாரம்..!! ஈத் அல் அதாவை முன்னிட்டு நடவடிக்கை..!!
துபாயில் ஈத் அல் அதா பண்டிகை விடுமுறையின் போது, விற்பனையகங்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, துபாய் முனிசிபாலிட்டி எமிரேட் முழுவதும் உள்ள பல்வேறு உணவகங்கள், ஹோட்டல்கள், சந்தைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கள ஆய்வுப் பிரச்சாரத்தை நடத்த ஆய்வுக் குழுக்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பிரச்சாரம் துபாயின் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பு போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான சட்டங்களுக்கு இணங்குவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, ஈத் அல் அதா கொண்டாட்டத்தின் போது மார்க்கெட், ரோஸ்டரிகள் மற்றும் பேஸ்ட்ரி கடைகள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் உணவுக் கிடங்குகள், உணவகங்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றின் தயாரிப்புகளின் தரநிலை மற்றும் சுகாதாரத்தை ஆய்வு செய்வதை மையமாகக் கொண்டு பல பிரச்சாரங்கள் மற்றும் ஆய்வு மற்றும் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான தரநிலைகள் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை பாதுகாப்பதன் மூலம், துபாய் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உடல்நலன் போன்றவற்றை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் முனிசிபாலிட்டி களமிறங்கியுள்ளதாக இது குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் பேக்கரிப் பொருட்களைத் தயாரிக்கும், உற்பத்தி செய்யும் மற்றும் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மற்றும் தயாரிப்பு, சேமிப்பு போன்ற செயல்பாடுகள் விதிகளுக்குட்பட்டு நடக்கின்றனவா என்பதை உறுதி செய்ய கள ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், உணவகங்கள் அல்லது பேக்கரிகளின் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பல்வேறு சுகாதார விதிமுறைகளைப் பற்றி மேலும் அறிய குடியிருப்பாளர்கள் 800900 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் துபாய் முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.