Covid19: மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது அமீரகம்..!!
கொரோனாவிற்கெதிரான மாடர்னாவின் தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டிற்கு பதிவு செய்வதற்கான ஒப்புதலை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும், தடுப்பூசியின் உள்ளூர் அவசரகால பயன்பாட்டை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்ட கடுமையான மதிப்பீட்டையும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதலையும் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாடர்னா தடுப்பூசி நாட்டின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது என்பதையும், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாட்டிற்கான உலகளாவிய தரங்களுக்கு இணங்குகிறது என்பதையும் உறுதிப்படுத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஒழுங்குமுறை துறையின் உதவி துணை செயலாளர் டாக்டர் அமீன் ஹுசைன் அல் அமிரி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி தொடர்பான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரங்களை பூர்த்தி செய்த பின்னர் உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தடுப்பூசியை இறக்குமதி செய்ய இது உதவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
FDA ஒப்புதலின் அடிப்படையில் தடுப்பூசி பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மறுஆய்வு செய்யப்பட்டன என்றும், மருத்துவ பரிசோதனைகள் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதைக் காட்டியுள்ளன என்றும் அல் அமிரி கூறியிருக்கிறார். அத்துடன், இந்த தடுப்பூசி கோவிட் -19 ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதோடு கூடுதலாக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
mRNA -1273 என்ற குறியிடப்படும் மாடர்னா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.