UAE: மூன்று எமிரேட்டுகளில் இன்று மேற்கொள்ளப்படும் களப்பயிற்சி.. குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் இன்று (டிசம்பர் 15, 2022) காலை மூன்று வெவ்வேறு எமிரேட்டுகளில் களப் பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகமானது, அமீரகத்தின் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைராவில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த பயிற்சிகள் குறித்து அமைச்சகம் பொதுமக்களை எச்சரித்ததுடன், இந்த நடவடிக்கைகளை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்துள்ளது. அத்துடன் பயிற்சி மேற்கொள்ளப்படும் இடத்திலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பயிற்சி நடைபெறும் இடங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சகம் தனது சமூக ஊடக பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெலிகாப்டர்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றுடன் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு கருதி இதனை, பொதுமக்கள் புகைப்படம் எடுக்க வேண்டாம். களப்பயிற்சி செய்யும் இடத்திலிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.