துபாயில் மழையின் போது வித்தை காட்டிய வாகன ஓட்டிகள் கைது.. 24 வாகனங்கள் பறிமுதல்..!!
துபாயில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது கடுமையான தண்டனைக்குரிய போக்குவரத்து குற்றமாகும். இருப்பினும், எமிரேட்டில் சில ஓட்டுநர்கள் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி அவ்வப்போது காவல்துறையினரிடம் பிடிபடுகின்றனர்.
அதேபோல் தான், அல் ருவையாவில் (Al Ruwayyah) சாலையில் பொறுப்பற்ற முறையில் ஸ்டண்ட் செய்த ஓட்டுநர்களின் 24 கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் இப்போது துபாய் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் X தளத்தில் பகிர்ந்துள்ளது.
View this post on Instagram
இச்சம்பவம் குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஸ்டண்ட் செய்தல், பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வாகனம் ஓட்டுதல், அதிக சத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் நகரும் காரில் இருந்து தலையை வெளியே நீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மீறல்களைச் செய்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டண்ட் செய்த 19 கார்கள் மற்றும் ஐந்து மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அல் மஸ்ரூய், அவற்றை விடுவிப்பதற்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், துபாய் காவல்துறையின் போக்குவரத்து ரோந்துப் படையினரால் மழையின் போது ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டிகளுக்கு எதிராக 35 போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, மழைநேரங்களிலும் மற்ற நேரங்களிலும் கவனமாக வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது பற்றி துபாய் காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், பொது அல்லது தனியார் உள்கட்டமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்றும் அல் மஸ்ரூய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel