UAE: நிறைய பணம் கொண்ட பையை கண்டெடுத்த வெளிநாட்டவர்.. காவல்துறையிடம் ஒப்படைப்பு..!! விழா நடத்தி கவுரவித்த காவல்துறையினர்..!!
அமீரகத்தில் அவ்வப்போது சிலர் பணம், பர்ஸ் போன்றவற்றை தொலைத்து விட்டு செல்வதும் அதனை கண்டெடுப்பவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதும் அவ்வப்போது நடக்கும் விசயம்தான். அதில் தற்பொழுது அபுதாபியில் ஒருவர் தொலைத்து விட்டுச் சென்ற நிறைய பணம் கொண்ட பை ஒன்றை கண்டெடுத்த ஒரு ஆசிய வெளிநாட்டவர் அதனை அபுதாபி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். அவரின் இந்த நேர்மையைப் பாராட்டி காவல்துறையானது சிறிய விழா ஒன்றை ஏற்பாடு செய்து அவரை கவுரவித்துள்ளது.
இது குறித்து அந்த வெளிநாட்டவர் கூறுகையில் பணத்தை இழந்தவர் திரும்ப இந்த பணப்பையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் சுற்றுலா காவல்துறையிடம் இந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த விழாவில் குற்றப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது சுஹைல் அல் ரஷிதி, அந்த நபரின் பங்களிப்பைப் பாராட்டி அவருக்குப் பரிசு வழங்கியுள்ளார்.
அத்துடன் அந்த அதிகாரி “இது போன்ற கருணைச் செயல்கள் சமூகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகின்றன” என்றும் கூறியுள்ளார். பாராட்டைப் பெற்ற அந்த நபர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு அபுதாபியில் மக்களின் பாதுகாப்பைப் பேணுவதில் அபுதாபி காவல்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் குற்றப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனரல் முஸ்லிம் அல் அம்ரி, சிஐடியின் இயக்குநர் மேஜர் ரஷித் கலாஃப் அல் தஹ்ஹேரி மற்றும் சுற்றுலா காவல் துறை தலைவர் ரஷீத் முஹம்மது அல் முஹைரி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.