UAE: வாகனத்தில் பயணிக்கும் டிரைவர் மட்டுமல்லாது அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்..!! காவல்துறை வலியுறுத்தல்..!!
வாகனம் ஓட்டுகையில் சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், சிலர் அதனைப் பொருட்படுத்துவது கிடையாது.
சீட் பெல்ட் போடாமல் வண்டி ஓட்டினால் அமீரகத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது அபுதாபி காவல்துறை.
வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் போடத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சீட் பெல்ட் போடத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் நான்கு கரும் புள்ளிகளும் (blackpoints) அவர்களின் லைசென்ஸில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு வாகனத்தில் உள்ள அனைத்துப் பயணிகளுமே சீட் பெல்ட்களை அணிய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மொபைல் போன் மற்றும் சீட் பெல்ட் விதிமீறல்களைக் கண்டறியும் தானியங்கி முறையை காவல்துறை முன்பு அறிவித்திருந்தது.
இதனைக் கண்டறிய ரேடார் கண்காணிப்பு அமைப்பு ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் கேமராக்கள் மூலம் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை பிடிக்கிறது.
சீட் பெல்ட் மற்றும் மொபைல் போன் மீறல்களைக் கண்டறிய ஒரு தானியங்கி செயல்முறை (automated process) படங்களை பகுப்பாய்வு செய்து விதிமீறல் புரிவோரைக் கண்டறிகிறது.
மேலும் முன் இருக்கைகளில் பயணிகளுக்கு விபத்து ஏற்பட்டால், சீட் பெல்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் இறப்பு அபாயம் 40 முதல் 50 சதவீதம் வரை குறைவதாகவும், பின்புற இருக்கைகளில் இருப்பவர்களுக்கு 25 முதல் 75 சதவீதம் வரை குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.