குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இந்தியா பயணிக்க இனி தூதரகத்தில் பதிவு செய்ய தேவையில்லை..!! உள்துறை அமைச்சகம் தகவல்..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் விமானங்களில் இந்தியா செல்வதற்கு பயணிகள் கண்டிப்பாக தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தூதரகத்தில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே வந்தே பாரத் விமானங்களில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இந்தியா “Air Bubble” ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகம் செல்வதற்கு தூதரகத்தில் பதிவு செய்ய தேவை இல்லை என்று இந்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation) அறிவித்துள்ளன.
இந்தியாவுடன் “Air Bubble” ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்கள் தூதரகத்தில் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் நேரடியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதரான நீரஜ் அகர்வால் இது குறித்து கூறுகையில், “தற்போது, இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் சில நாடுகளுக்கும் இதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. Air Bubble ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப தூதரகத்தில் பதிவு செய்ய தேவையில்லை. அவர்கள் நேரடியாக வந்தே பாரத் திட்டத்தில் இயக்கப்பட்டு வரும் விமானங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.