அமீரக செய்திகள்

தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!! யார் அந்த தொழிலதிபர்??

புனித ரமலான் மாதத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தாய்மார்களை கௌரவிக்கும் நோக்கத்தில் துபாயின் ஆட்சியாளரால் அறிவிக்கப்பட்ட ‘1 பில்லியன் திர்ஹம்’ பிரச்சாரத்திற்கு, துபாயில் தொழில்புரிந்து வரும் இந்தியர் ஒருவர் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் ‘Mother’s Endowment’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான பியூமெர்க் கார்ப்பரேஷனின் CEO சித்தார்த் பாலச்சந்திரன் என்ற இந்திய தொழிலதிபரே இந்த பிரச்சாரத்திற்கு 10 மில்லியன் திர்ஹம் பங்களிப்பை வழங்கியவர் ஆவார்.

கேரளாவைச் சேர்ந்த சித்தார்த் பாலச்சந்திரன், தாய்மார்களின் தாராள மனப்பான்மையைக் கொண்டாடும் போது உதவி செய்வதற்கான வாய்ப்புக்காக துபாய் ஆட்சியாளருக்கு நன்றி கூறியதுடன், “உலகம் முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்குவதே நமது தாய்மார்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்க சிறந்த வழியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உலகெங்கிலும் கடினமான வாழ்க்கையை வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகல் சாத்தியமில்லை என்பதால், இந்த பிரச்சாரம் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்த சித்தார்த், கல்வியின் மூலம் அவர்களின் யதார்த்தத்தை மேம்படுத்துவதற்கு இந்த நிதி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருப்பதால், இந்த இரண்டு பெரிய நாடுகளின் கருணையை தாழ்மையுடன் வெளிப்படுத்தவும், உலக மக்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அமீரகத்தின் நிலைப்பாடு:

முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Mothers’ Endowment’ பிரச்சாரம் பின்தங்கிய சமூகங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் அமீரகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

முக்கியமாக, இந்த பிரச்சாரம் புனிதமான ரமலான் மாதத்துடன் இணைந்து, பெற்றோர்களை கௌரவப்படுத்துதல், கருணை, இரக்கம் மற்றும் சமூகம் முழுவதும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மனிதாபிமான பங்கை உறுதிப்படுத்துகிறது.

நன்கொடை சேனல்கள்:

‘Mothers’ Endowment’ பிரச்சாரமானது, பிரச்சாரத்தின் இணையதளம் (Mothersfund.ae) மற்றும் கட்டணமில்லா எண் (800 9999) உட்பட ஆறு முக்கிய சேனல்கள் மூலம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை வரவேற்கிறது.

அதில் எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கியின் (AE790340003708472909201) பிரச்சார வங்கிக் கணக்கு எண்ணுக்கு வங்கிப் பரிமாற்றங்கள் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், Etisalat by e& வாடிக்கையாளர்கள் “Mother” என்ற வார்த்தையை பின்வரும் எண்களுக்கு (1034, 1035, 1036, 1038) SMS அனுப்புவதன் மூலமும் நன்கொடைகளை வழங்க முடியும்.

இவைதவிர, DubaiNow செயலியில் “Donations” என்ற தாவலைக் கிளிக் செய்வதன் மூலமாகவும், Jood (Jood.ae) என்கிற துபாயின் சமூக பங்களிப்பு தளம் மூலமாகவும் பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!