அமீரகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை.. தனியார் ஊழியர்களுக்கு தொலைதூர வேலை.. அமைச்சகம் வலியுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் நாட்டில் நிலவும் நிலையற்ற மோசமான வானிலை காரணமாக ஊழியர்களுக்கு ‘தொலைதூர வேலையை அனுமதிக்க (Remote Work)’ வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீராகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் இது குறித்து இன்று மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், மோசமான வானிலை காரணமாக நாளை சனிக்கிழமை (மார்ச் 9) நெகிழ்வான வேலை முறைகளைப் பயன்படுத்துமாறு தனியார் துறை நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற சூழலில் தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து தொழில்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களை மனிதவள அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அபுதாபியின் சில பகுதிகளில் மோசமான வானிலை தொடங்கியுள்ளதாக தெரிவித்த புயல் மையம் (Storm Center) சில இடங்களில் காற்று மற்றும் பலத்த மழை பெய்து வருவதாகவும் கூறியுள்ளது. அத்துடன் அல் அய்ன் மற்றும் அபுதாபியில் கடுமையான வானிலை நிலையைக் காட்டும் சில வீடியோக்களையும் புயல் மையம் X தளத்தில் பகிர்ந்துள்ளது.
The Ministry of Human Resources and Emiratisation (MoHRE) said in light of the exceptional weather conditions in the UAE and after coordinating with relevant authorities, “we call on private sector companies to take caution and all necessary occupational safety measures to…
— وزارة الموارد البشرية والتوطين (@MOHRE_UAE) March 8, 2024
வானிலை முன்னறிவிப்பு
மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நாட்டில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும், நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கூடவே பலத்த காற்று வீசும் என்பதால் சாலைகளில் பார்வைத் திறன் குறைவாக இருக்கலாம் எனவும், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை வானிலை மிக மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மோசமான சூழலில் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க நாட்டின் காவல்துறை, மீட்பு அதிகாரிகள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகியவை முழுமையாக தயாராக உள்ளன என்று அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.