அபுதாபியை புரட்டிப் போட்ட கனமழை.. அமீரகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 16) பிற்பகலில் இருந்து நிலையற்ற வானிலை மோசமாகி வருவதால், அபுதாபி, துபாய் உட்பட அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான வானிலை நாடு முழுவதும் நிலவுவதால், குடியிருப்பாளர்கள் ‘மிகவும் விழிப்புடன்’ இருக்குமாறு அமீரக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அமீரக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் இரண்டாவது அலை இன்று பிற்பகலில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று, சரியாக இன்று மாலை 5.30 மணியளவில் இருந்து அபுதாபியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அபுதாபி சிட்டியின் சாலைகள் மற்றும் தெருக்கள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
View this post on Instagram
அதேபோன்று அபுதாபியின் முஸாஃபா, ஷாபியா, MBZ சிட்டி, கலிஃபா சிட்டி உள்ளிட்ட பகுதிகளையும் இதுவரை இல்லாத அளவிற்கு தீவிரத்துடன் பெய்த கனமழை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், குடியருப்பாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அமீரகத்தில் விடுக்கப்பட்டுள்ள இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கையானது, நாளை புதன்கிழமை காலை வரை தொடரும் என்பதால், குடியிருப்பாளர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.