UAE: மோசமான வானிலை காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலை.. அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நாடு முழுவதும் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்களும் தொலைதூரத்தில் இருந்து பணிபுரியுமாறு (Remote Work) அமீரக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இரவில் இருந்து அபுதாபி உட்பட நாட்டின் பல இடங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் இன்று ஏப்ரல் 16, செவ்வாய்கிழமை தொலைதூர வேலைகளை கடைபிடிக்க அமீரகத்தின் அமைச்சர்கள் குழு நேற்றே உத்தரவிட்டிருந்தது.
மேலும், நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலை நிலையைக் கருத்தில் கொண்டு அமீரக அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், பணியிடத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய சில கூட்டாட்சி ஊழியர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், தனியார் துறை நிறுவனங்கள், தவிர்க்க முடியாத வெளிப்புற வேலை சூழல்களில் தங்கள் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் (MoHRE) நேற்று அறிவுறுத்தியிருந்தது.
மேலும், இந்த நிலையற்ற வானிலையின் போது தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதலாளிகளையும் நிறுவனங்களையும் அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமானது வலியுறுத்தியது. அத்துடன் இதனை அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சகம் எச்சரித்தது.
இது குறித்து MoHRE வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள மோசமான வானிலையின் காரணத்தாலும், நாடு முழுவதும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பிலும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel