ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாகவே மூடுபனி அதிகமாக நிலவி வரும் பட்சத்தில் இன்று (வியாழக்கிழமை), அடர்ந்த மூடுபனி காரணமாக விமான சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக பல விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில் “மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த தெரிவுநிலை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை முதல் DXB செயல்பாடுகளில் இடையூறுகளை சந்தித்து வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணி நிலவரப்படி, உள்வரும் 19 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக துபாய் விமான நிலையங்கள் விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் அனைத்து விமான நிலைய கூட்டாளர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, செயல்பாட்டை விரைவாக நிலைப்படுத்தவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் உதவி வருகின்றனர்” என்று துபாய் ஏர்போர்ட்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே இந்த காலகட்டத்தில் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் சமீபத்திய புதுப்பிப்புகளை அவ்வப்போது உறுதிப்படுத்தி கொள்ளுமாறும் அறிவிறுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் விமான நிலையத்தில் அதிகளவு பயணிகள் கூடுவார்கள் என்பதாலும் தற்பொழுதுள்ள நிலவி வரும் வானிலையாலும் துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel