புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்..!! பொதுமக்களை அறிவுறுத்திய அமீரக அரசின் செய்தித் தொடர்பாளர்..!!
உலகெங்கிலும் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் தீவிரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மேலும் அதிவேகமாக பரவும் தீவிரத்தன்மையுடைய புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து உலகில் பல நாடுகளிலும் அந்த புதிய கொரோனா வைரஸ் குறித்து பலவேறு தகவல்களும் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த புதிய வகை வைரஸ் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கட்டுப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமீரகத்தில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கோவிட் -19 மாநாட்டின் போது அமீரக அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் உமர் அப்துல்ரஹ்மான் அல் ஹம்மாதி இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் எல்லாமே கட்டுப்பாட்டில் இருப்பதால் பீதி அடையத் தேவையில்லை. தகுதிவாய்ந்த பணியாளர்களை கொண்ட எங்கள் சுகாதாரத்துறையினால், எந்தவொரு முன்னேற்றங்களையும் திறமையாகக் கையாளவும் குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை வழங்கவும் முடிகிறது” என்றுள்ளார்.
மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் வீட்டு தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வைரஸ் குறித்து ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“வைரஸ்கள் வழக்கமாக அவற்றின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக காலப்போக்கில் அந்த வைரஸ்களின் தீவிரமும் மாற்றம் பெறுகின்றன. ஆனால் தடுப்பூசிகள் இந்த வைரஸ்களை விட்டும் பாதுகாக்கும் என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை” என்றும் செய்தியாளர் கூட்டத்தில் அல் ஹம்மாதி தெரிவித்துள்ளார்.