அமீரகவாசிகளே.. இலவசமாக ஏர் ஷோ, போர் விமானங்களை காணும் வாய்ப்பு..!! எங்கே, எப்பொழுது..??
உலகின் மிக கவர்ச்சிகரமான ஏர் ஷோ என்றழைக்கப்படும் விமான கண்காட்சிகளில் ஒன்றாக துபாயில் பொது மக்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் தினசரி இலவசமாக துபாய் ஏர் ஷோ 2021 ஐப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இருக்கைகள் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் இலவசமாக பார்ப்பதற்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு (Airshow) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 17வது ஏர்ஷோ நிகழ்ச்சி நவம்பர் 14 முதல் 18 வரை துபாய் வேர்ல்ட் சென்ட்ரல், துபாய் ஏர்ஷோ தளத்தில் உள்ள ஸ்கைவியூவ் கிராண்ட்ஸ்டாண்டில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு முதல் நிகழ்த்தப்படவுள்ள இந்த ஏர்ஷோ ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே மிகப்பெரிய நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட், பொதுவாக விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்பொழுது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஏர் ஷோ மட்டுமல்லாமல் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சில போர் விமானங்கள் மற்றும் பெரிய வணிக விமானங்களின் பிரம்மாண்டமான காட்சியையும் பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
“ஏர்ஷோவில் கண்கவர் காட்சியைப் பார்த்து ரசிக்க பொது மக்களை வரவேற்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். ஸ்கைவியூ கிராண்ட்ஸ்டாண்ட் ஓடுபாதைக்கு அருகில் வலதுபுறத்தில் இருந்து ஏர் ஷோவை காண்பதற்கான சரியான பகுதியாகும்” என்று டார்சஸ் மத்திய கிழக்கு நிர்வாக இயக்குனர் திமோதி ஹாவ்ஸ் கூறியுள்ளார்.
இது நவம்பர் 14 மற்றும் 18 க்கு இடையில் மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என்றும் பொது மக்களுக்கான அணுகல் ஸ்கைவியூ பகுதிக்கு மட்டுமே என்றும் பிரதான ஏர்ஷோ கண்காட்சி அரங்கிற்கு அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக பொது மக்களுக்கு, எக்ஸ்போ 2020 துபாய் மற்றும் இப்னு பதூதா மெட்ரோ நிலையங்களில் இருந்து இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.