அபுதாபி: முசாஃபா பகுதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து..!!
அபுதாபியின் முசாஃபா தொழில்துறை பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்தானது பழைய பொருட்களை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கில் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாலை முதல் தொடர்ந்து சில மணிநேரங்களாகவே விடாமல் தீ எரிந்து கொண்டிருந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த அபுதாபி காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்துனால் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கே குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வதந்திகள் பரவுவதைத் தவிர்க்க, தகவலுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த தீவிபத்தின் காரணமாக காலை முதலே அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.