இந்தியா-அமீரக வர்த்தக ஒப்பந்தம்: அமீரகத்தில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் IIT கல்வி நிலையம்…!!
இந்தியா-அமீரகம் இடையே கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் இந்திய தொழில்நுட்பக் கழகத்தை (IIT) அமைக்கவுள்ளதாக இந்தியா தற்பொழுது அறிவித்துள்ளது. அவ்வாறு IIT அமீரகத்தில் அமைக்கப்பட்டால் இந்தியாவுக்கு வெளியே IIT நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், “இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்று உறவுகளை உறுதிசெய்து, புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவ தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்பொழுது 23 IIT இருக்கின்றன. இந்த 23 IITகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளங்கலை (UG), முதுகலை (PG) மற்றும் முனைவர் (PhD) நிலை திட்டங்களை வழங்குகின்றன. IIT டெல்லி, IIT பாம்பே, IIT காரக்பூர் மற்றும் IIT மெட்ராஸ் ஆகியவை இந்தியாவின் சில சிறந்த IIT ஆகும். முக்கியமாக, இவை B.Tech மற்றும் M.Tech பட்டப்படிப்புகளை வழங்குவதில் பெயர் பெற்றவை.
IIT-யில் சேருவதற்கு சேர்க்கையானது, கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination), JEE advanced மூலம் நடத்தப்படுகிறது, மேலும் JEE மெயினில் முதல் தரவரிசையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் JEE advanced-க்கு வரத் தகுதியுடையவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.