UAE : மீண்டும் திறக்கப்படவிருக்கும் இயற்கை எழில் மிகுந்த Jubail Mangrove Park..!!
அபுதாபியில் கடந்த வருடம் புதிதாக திறக்கப்பட்ட ஜுபைல் தீவில் அமைந்திருக்கும் ஜுபைல் மங்கிரோவ் பார்க்கானது (Jubail Mangrove Park) தற்பொழுது அமீரகத்தில் கோடைகாலம் முடிந்து வானிலை மாறி வருவதால் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி அல் ஜுபைல் தீவில் அமைந்துள்ள மங்கிரோவ் பார்க் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட்டது. தற்பொழுது மீண்டும் வரும் அக்டோபர் மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்படவுள்ள ஜுபைல் மங்கிரோவ் பார்க்கிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 10 திர்ஹம் கட்டணமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 திர்ஹம் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் முன்பதிவு செய்வதும் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூபில் தீவு முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ரிச்சர்ட் ரஸ்ஸல் அவர்கள் இது குறித்து கூறுகையில், “மீண்டும் திறக்கப்படவிருக்கும் ஜுபைல் பார்க்கில் கொரோனாவினை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஜுபைல் மங்கிரோவ் பார்க்கிற்கு வருகை தரும் மக்கள் சரியான சமூக இடைவெளியை பராமரிப்பது, முக கவசங்களை பயன்படுத்துவது, தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பார்க்கினை தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஜூபைல் மாங்ரோவ் பார்க் திட்டமானது கடந்த 2020 ஜனவரியில் திறக்கப்பட்டது. இது இயற்கை வாழ்விடத்தையும் அதன் பல்லுயிரியலையும் பாதுகாக்கும் அதே வேளையில் சதுப்புநிலங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.
ஒரு மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மங்கிரோவ் பார்க்கில் போடப்பட்டிருக்கும் நடைபாதையே அமீரகத்தில் முதல் முறையாக சதுப்பு நில காடுகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் நடைபாதையாகும். இந்த நடைபாதையில் மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன. இதில் மிகவும் குறுகிய பாதையானது 1 கி.மீ தொலைவையும் நீண்ட பாதையானது 2 கி.மீ தொலைவையும் கொண்டுள்ளன. மேலும் இரு பக்கமும் வலையுடன் கூடிய மிதக்கும் பாலமும் இங்குள்ளது. கூடவே அங்குள்ள சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அங்கே சில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவல்கள் மற்றும் முன்பதிவு செய்ய https://park.jubailisland.ae/ என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.