அபுதாபியில் ஷாப்பிங் மால், கடை ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு கொரோனாவின் பாதிப்பையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. துபாயில் விதித்திருந்த இயக்கக கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஷாப்பிங் மால்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அபுதாபியில் கொரோனாவின் பாதிப்பினால் மூடப்பட்டிருந்த ஷாப்பிங் மால்கள் கூடிய விரைவில் திறக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாப்பிங் மால்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் அபுதாபியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுவதையொட்டி கொரோனா மேலும் பரவாமல் தடுக்கவும் மால்களுக்கும் வரும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA), இதுவரையிலும் அபுதாபி முழுவதும் உள்ள மால் மற்றும் கடை ஊழியர்களுக்கான சுமார் 20,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் அதிகரித்துள்ளது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் கீழ், ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான கடுமையான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வணிக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை வெளியிட்ட அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறையின் (ADDED) ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் (Ambulatory Healthcare Services) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஹவாஸ் அல் சாதித் இது பற்றி கூறும்போது “கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து, வைரஸ் பரவுவதைக் குறைக்கவும், சமூகத்தைப் பாதுகாக்கவும் ஐக்கிய அரபு அமீரக தலைமையும் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களுடனும் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அபுதாபி தற்பொழுது அதன் வணிக வளாகங்களை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதால், அவர்களின் ஊழியர்கள் மற்றும் அபுதாபியின் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எங்கள் முன்னுரிமையாக உள்ளது. எங்கள் குழுமம், நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அனைவரும் அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறையால் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி மால்களை மீண்டும் திறப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மால் மற்றும் கடை ஊழியர்கள் அபுதாபியின் அபுதாபி நகரம், அல் வத்பா, அல் பாஹியா, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள SEHA-வின் ஏழு கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (drive-through screening facilities) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீண்டும் வேலைக்கு வரும் முன் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சமூக விலகல், வழக்கமான சுத்திகரிப்பு, முக கவசம் மற்றும் கையுறைகளின் பயன்பாடு மற்றும் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வெப்பநிலை சோதனைகள் ஆகியவை குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீஸ் நிறுவனத்தின் (Ambulatory Healthcare Services) தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் நூரா அல் கெய்தி கூறுகையில் “நாங்கள் புனித ரமலான் மாதத்தில் இறங்கும்போது ஷாப்பிங் மால்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று எங்கள் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, எங்கள் மருத்துவ மற்றும் நிர்வாக குழுக்கள் அனைத்து மால் மற்றும் கடை ஊழியர்களும் வைரஸால் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வாரம் முழுவதும் வேலை செய்துள்ளன” என்று கூறியுள்ளார்.
source : Gulf News