மொபைல் போனில் கூகுள் குரோம் பயன்படுத்துபவரா.? அமீரகத்தின் சைபர் செக்யூரிட்டி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை..!!
கூகுள் குரோம் பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதியதொரு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூகுள் குரோம் பயன்படுத்தும் நபர்கள் தங்கள் பிரவுஸர்களை சரிபார்த்து, சமீபத்திய வெர்சனை பயன்படுத்துவதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் சைபர் செக்யூரிட்டி கவுன்சில் கூகுள் குரோம் பயனர்களுக்கு ஒரு ஆலோசனையையும் வெளியிட்டுள்ளது. அதில், பிரவுஸரில் கண்டறியப்பட்ட “பல உயர்-ஆபத்து பாதிப்புகள்” குறித்து பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
அதாவது இந்த குறைபாடுகள் ஒருவரின் மொபைல் போனை ஹேக் செய்து அந்த சாதனத்தில் அவர்கள் தங்களுக்கேற்ப கோடினை (code) மாற்றி, அதனை தங்களின் கட்டுப்பாட்டில் இயங்க வைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிக்கலைத் தீர்க்க கூகுள் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு செக்யூரிட்டி அப்டேட் வெளியிட்டது என்றும், எனவே பயனர்கள் தங்கள் குரோம் பிரவுஸரை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் “சமீபத்திய பதிப்பைப் பெறுவது, உங்கள் தகவல் மற்றும் தனிப்பட்ட தரவு அல்லது பிற தீங்கிழைக்கும் செயல்கள் புரிவதை தவிர்க்க உதவும்” என்றும் அமீரகத்தின் சைபர் செக்யூரிட்டி கவுன்சில் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.