அமீரக செய்திகள்

அபுதாபி செல்லும் குடும்பத்தினர் லேசர் சோதனை மேற்கொள்ள முன்பதிவு தேவை இல்லை..!! தனிநபர் முன்பதிவிற்கு மேலும் மூன்று புதிய மையங்கள் திறப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் செல்ல விரும்பும் குடும்பங்கள் துபாய், அபுதாபியின் எல்லை பகுதியான கந்தூத் பகுதியில் அமைந்திருக்கும் லேசர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய தேவையில்லை என்று லேசர் பரிசோதனை நிலையத்தின் மேற்பார்வையாளர் அகமது அல் ரியாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் திறந்திருக்கிறோம். மேலும் குடும்பமாக வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம். தனிநபர்களை போல அவர்கள் சோதனைக்கு வருவதற்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “நாங்கள் தினசரி சுமார் 6,500 பேரைப் பரிசோதிக்கிறோம். வார இறுதி நாட்களில் 8,000 பேர் வரை பரிசோதனைக்காக இந்த மையத்தை அணுகுகிறார்கள். ஈத் விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வரை இந்த சோதனை மையத்தை அணுகுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் அல் ரியாமி கூறினார்.

மற்ற கொரோனா பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் PCR கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை (370 திர்ஹம்) விட லேசர் பரிசோதனைக்கு குறைந்த கட்டணமே (50 திர்ஹம்) வசூலிக்கப்படுவதால் அபுதாபிக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் பெரும்பாலும் லேசர் பரிசோதனையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த லேசர் பரிசோதனை மையமானது அபுதாபிக்குள் நுழைய இருக்கும் பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான சோதனையை வழங்குகிறது.

இதனால், லேசர் பரிசோதனை மையம் ஆரம்பித்த நாட்களில் மிக அதிகளவு நபர்கள் கொரோனா பரிசோதனைக்காக இந்த மையத்தை அணுகியதால் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் புக்கிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குடும்பமாக வருபவர்கள் தவிர மற்ற அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், லேசர் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு அடுத்த இரு வாரங்களுக்கு முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த பிரச்சனை சில நாட்களில் தீர்க்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஈத் முடிந்ததும் அபுதாபியில் கூடுதலாக, மூன்று லேசர் சோதனை மையங்கள் திறக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கூடுதல் லேசர் பரிசோதனை மையங்களானது அபுதாபியில் இருக்கக்கூடிய சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Zayed Sports City), கார்னிச் பகுதி (Corniche area) மற்றும் அல் அய்னில் இருக்கக்கூடிய ஹிலி பகுதியில் (Hili area) அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ள விரும்புபவர்கள் SEHA எனும் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் இங்கு சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!