UAE: தனிமைப்படுத்தல் விதியை மீறிய கொரோனா நோயாளியை கைது செய்த காவல்துறை..!! 50,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நாட்களாக கொரோனாவின் பாதிப்புகள் சற்று கூடிக்கொண்டே வரும் வேளையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுகாதார அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தொடர்பான விதிகளை மீறியதற்காக ஷார்ஜா காவல்துறையினர் அந்த நோயாளியை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நோயாளியை காவல்துறையினர் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்தியுள்ளதுடன் மீண்டும் அவர் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறாமல் இருப்பதை உறுதிப்படுத்த கட்டுப்பாடுகளையும் தற்போது கடுமையாகியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய ஷார்ஜா காவல்துறையின் இயக்குனர் பிரிகேடியர் டாக்டர் அகமது சயீத் அல் நாவூ, வீட்டு மற்றும் சுகாதார தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றவாளிகளுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அமீரக சட்டத்தின்படி கோவிட்-பாசிட்டிவ் நோயாளிகள் தங்கள் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிட் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஷார்ஜா முழுவதிலும் காவல்துறை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது என்றும் கடந்த செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நாட்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய 2,437 குடியிருப்பாளர்களை போலீசார் பிடித்துள்ளனர் எனவும் பிரிகேடியர் டாக்டர் அகமது சயீத் அல் நாவூ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது மற்றும் ஒரே வாகனத்தில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணித்தது போன்ற 26 வகையான விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்தம் 2,486 குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் வகையில் அமீரக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் பிரிகேடியர் டாக்டர் அல் நாவூ குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.