UAE: ஒரே இரவில் 60,310 வழிபாட்டாளர்கள்.. லைலத் அல் கத்ர் இரவில் ஸ்தம்பித்து போன ஷேக் சையது மசூதி..!!
அபுதாபியில் உள்ள ஷேக் சையது கிராண்ட் மசூதியில் ரமலானின் 27வது இரவில் மட்டும் 60,310 முஸ்லிம்கள் மசூதியில் கூடி தொழுகையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியின் இந்த பெரிய மசூதி திறக்கப்பட்ட நாளிலிருந்து அதிக எண்ணிக்கையில் வழிபாட்டாளர்களை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரமலான் மாதத்தில் வரும் லைலத் அல் கத்ர் எனும் இரவானது, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் முதல் வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட இரவு என்று நம்பப்படுகிறது. லைலத் அல் கத்ரின் சரியான தேதி தெரியவில்லை என்றாலும், இது ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படை எண் கொண்ட இரவுகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாள் பெரும்பாலும் ரமலானின் 27வது இரவு அன்று இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால் அந்த இரவில் மட்டும் மற்ற நாட்களை விட அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் மசூதிக்கு வந்து வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
அபுதாபி போலவே அல் அய்னில் உள்ள ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதியிலும், அதே இரவில் மொத்த வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 23,552 ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபுஜைரா எமிரேட்டில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் மொத்த வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை 5,239 வழிபாட்டாளர்களை எட்டியது என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல் துபாய் முழுவதும் உள்ள மசூதிகளில் இந்த இரவில் மட்டும் கியாமுல் லைல் எனப்படும் சிறப்பு தொழுகையை 50,000 க்கும் மேற்பட்டோர் மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.