Covid19: அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தனி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு..!!
கோவிட் -19 தடுப்பூசி எடுக்க தகுதி பெற்றவர்களாக இருந்தும், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத குடியிருப்பாளர்கள் மீது இயக்க கட்டுப்பாடுகளை விதிக்கும் சாத்தியத்தை ஐக்கிய அரபு அமீரகம் தற்பொழுது பரிசீலித்து வருகிறது.
இந்த கட்டுப்பாடுகளில் சில இடங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்கள் நுழைவதற்கு தடை விதிப்பது மற்றும் சில சேவைகளுக்கான அணுகல் மறுப்பது ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகின்றது.
கோவிட் -19 தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் சைஃப் அல் தஹேரி கூறியதாவது: “தடுப்பூசி எடுப்பதில் தாமதம் அல்லது தவிர்ப்பது சமூகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது மற்றும் அனைத்து குழுக்களையும், குறிப்பாக மிகவும் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்புள்ள நபர்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
16 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “இன்று நீங்கள் காட்டும் தயக்கம் உங்கள் குடும்பம், அன்புக்குரியவர்கள் மற்றும் சமூகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. தடுப்பூசியைப் பெறுவது நோய்த்தடுப்பு மற்றும் சமூகத்தை இந்த தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பங்களிக்கும்” என கூறியுள்ளார்.
மருத்துவ பிரச்சனைகளைக் கொண்ட நபர்கள் தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களா என்பதை தீர்மானிக்க ஒரு சிறப்பு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தடுப்பூசி போட்டுக் கொள்வது உலகம் முழுவதும் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸிற்கு எதிரான பாதுகாப்பைக் வழங்கும். தற்போதைய நோக்கம் கொரோனாவிற்கான எதிர்ப்பு சக்தியை அடைவதும், வரவிருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதும் ஆகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் செயல்திறன் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அல் தஹேரி கூறினார்.
அபுதாபியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்களிடையே இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதைத் தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறன் 93 சதவீதமாகும், மேலும் ICU வின் தேவையை குறைப்பது 95 சதவீதமாகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.