துபாயை வந்தடைந்த கொரோனாவிற்கான இந்திய தடுப்பூசி..!! யார் யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்??
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி (AstraZeneca Covid-19 vaccine) நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏர் இந்தியா விமானத்தின் மூலம் துபாய் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து துபாய் சுகாதார ஆணையம் (DHA) கொரோனாவிற்காக வழங்கப்படும் தடுப்பூசி பட்டியலில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியையும் தற்பொழுது இணைத்துள்ளது.
துபாயில் ஏற்கனவே ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
DHA-வின் மருத்துவ ஆதரவு சேவைகள் மற்றும் நர்சிங் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியும் கோவிட் -19 தடுப்பூசி வழிநடத்தல் குழுவின் தலைவருமான டாக்டர் ஃபரிதா அல் காஜா அவர்கள் ஒன் சென்ட்ரல் வாக்சினேஷன் சென்டரில் (One Central Vaccination Centre) அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள்
18 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து அமீரக குடிமக்களும் இந்த தடுப்பூசியினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லுபடியாகும் டுபாய் விசா வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள், 18 முதல் 60 வயதிற்குட்பட்ட நாள்பட்ட நோயுடையவர்கள் ஆகியோரும் இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறுவதற்கான செயல்முறை
ஒன் சென்ட்ரல் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி பெற, விரும்புவோர் 800 342 என்ற எண்ணில் DHA தொடர்பு மையம் மூலம் அப்பாய்ண்ட்மெண்டை புக் செய்ய வேண்டும்.
மேலும், தடுப்பூசி மையத்தில் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த முன்னணி பணியாளர்கள் மற்றும் முக்கிய துறை ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளில் உள்ள நபர்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் அவர்கள் பணிபுரியும் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டமிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.