UAE: பள்ளி திறப்பை முன்னிட்டு அரசு வேலை பார்க்கும் பெற்றோர்கள் 3 மணி நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி..!!
அமீரகத்தில் பெரும்பாலான பள்ளிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி திறக்கப்படுவதால் பெற்றோர்கள், அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டையும் சமன் செய்யும் வகையில், அலுவலகம் செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR), பள்ளி திறப்பதற்கான சிறப்புக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையினை அனைத்து அமைச்சகங்களுக்கும் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
இந்த சலுகையின் படி பிரைமரி ஸ்கூல் மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வேலை தொடங்கும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் ஆகிய இரண்டிலும் நெகிழ்வுத் தன்மையை வழங்க திட்டமிட்டுள்ளது. எனவே, இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், வீடு திரும்பவும் முடியும் என கூறப்படுகின்றது.
இதன்படி, பள்ளி திறக்கும் முதல் நாளில் அதிகபட்சமாக மூன்று மணி நேரம் பெற்றோர்கள் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பள்ளி பாடத்திட்டங்களின்படி வெவ்வேறு பள்ளிகள், வெவ்வேறு தேதிகளில் திறக்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு அனுமதி எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் முதல் வாரத்தில் தங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை பெறலாம் என்றும் குழந்தைகள் முதல் முதலாக பள்ளிக்குச் செல்லும் பொழுது அவர்களின் மனநிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு இந்த முடிவினை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பணிபுரியும் அலுவலகத்திற்கு இடையூறு விளைவிக்காமல், வேலைத்தரத்தை சமரசம் செய்யாமல் தங்களுக்குரிய அனுமதியை பெற்று பள்ளிகளுக்கு செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.