வளைகுடா செய்திகள்

முடிவுக்கு வரும் சவூதி அரேபியா, கத்தார் இடையேயான தடை..!! நில, வான் மற்றும் கடல் எல்லைகளை மீண்டும் திறக்க ஒப்பந்தம்..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா தனது வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லையை அண்டை நாடான கத்தாருக்கு கடந்த சில வருடங்களாக விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி மீண்டும் திறக்க உள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகள் கத்தாரை புறக்கணிக்க வழி வகுத்த ஒரு அரசியல் பிரச்னையை தீர்ப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கோளிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா அவர்கள் கூறுகையில், “சவூதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் இடையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை நிலவரப்படி வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லைகளை திறக்க ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

வடமேற்கு சவுதி நகரமான அல் உலாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) தலைவர்களின் உச்சி மாநாட்டில் (GCC summit) முழு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளும் கத்தார் புறக்கணிப்பை (Boycott) முடிவுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இதன் மூலம், கத்தாருடனான உறவை முறித்த நாடுகளுக்கிடையில் நல்வித உறவு ஏற்பட்டு மீண்டும் அந்த நாடுகளுக்குக்கிடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

அதனை தொடர்ந்து, சவூதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் இடையில் எல்லைகள் திறக்கப்பட இருப்பதை GCC பொதுச்செயலாளர் டாக்டர் நயீப் அல் ஹஜ்ரப் அவர்கள் வரவேற்பதாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். GCC உச்சிமாநாடானது வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்யும் என்று ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் டாக்டர் அன்வர் முகமது கர்காஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளானது கடந்த ஜூன் மாதம் 2017 ம் ஆண்டு முதல் கத்தார் நாட்டிற்கு பயணத் தடையை விதித்தது. மேலும், அந்நாட்டு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்பொழுது வரை அந்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!