“நன்றி, அட்லஸ் லயன்ஸ்”.. மொராக்கோ அணியினை பாராட்டி பதிவிட்ட துபாய் மன்னர் மற்றும் இளவரசர்..!!
FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ-பிரான்ஸ் இடையேயான அரையிறுதிப் போட்டி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மொராக்கோ அணியை 2-0 என்று வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வருட உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி வந்த மொராக்கோ அணி இந்த போட்டியுடன் வெளியேறியுள்ளது. நேற்று நடந்த இந்த போட்டி முடிவடைந்தவுடனேயே, துபாய் ஆட்சியாளரும், துபாயின் பட்டத்து இளவரசரும் மொராக்கோ அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கே் கூறியதாவது: “உங்களின் விளையாட்டுத்திறனை எண்ணி பெருமை கொள்கிறோம். மொராக்கோ மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு மன்றத்தில் அரேபியர்களை முன்னிறுத்தியுள்ளது. நன்றி, அட்லஸ் லயன்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.
துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், ”மொராக்கோ தேசிய அணியின் வீரர்களுக்கு நன்றி. கத்தார் 2022 உலகக் கோப்பையில் விளையாடிய சிறப்பான கால்பந்து ஆட்டத்தின் மூலம் அரேபியர்களை கவுரவித்துள்ளீர்கள். மேலும் உறுதியுடனும் லட்சியத்துடனும் எதுவும் சாத்தியமில்லை என்பதை அறிந்த ஒவ்வொரு அரேபியருக்கும் நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள். இறைவன் நாடினால், நம் அரேபிய இளைஞர்களுக்கு எல்லா இடங்களிலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மொராக்கோ அணியானது இந்த உலக கோப்பை போட்டியில் யாரும் எதிர்பாராத அளவில் மிக சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. கால்பந்து போட்டியில் தரவரிசையில் முக்கிய இடங்களில் இருக்கும் ஐரோப்பிய அணிகளான பெல்ஜியத்தை குழுநிலையிலும், பின்னர் நாக் அவுட் சுற்றுகளில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலையும் வீழ்த்தி முதல் அரபு நாடாக மொராக்கோ அணி உலக கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பெருமைபடுத்தது குறிப்பிடத்தக்கது.