குவைத் திரும்பும் இந்தியர்கள் பதிவு செய்ய “ஆன்லைன் படிவம்” வெளியிட்ட இந்திய தூதரகம்..!! லிங்க் உள்ளே..!!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்ட இந்தியாவிற்கும் குவைத்திற்கும் இடையேயான விமான பயண தடை அமலில் இருக்கும் சூழலில், குவைத் நாட்டு குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் குவைத் நாட்டிற்கு திரும்பலாம் என குவைத் அரசால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் சிக்கி தவிக்கும் குவைத் குடியிருப்பாளர்களின் பயணம் தொடர்பான சிக்கல்களை களையவும், கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட பயணம் தொடர்பான தரவுகளை சேகரிக்கவும் குவைத்திற்கான இந்திய தூதரகம் ஒரு பதிவு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
குவைத் நாட்டிற்கு பயணிக்க கூடிய செல்லுபடியாகும் குவைத் நாட்டு விசா வைத்திருப்பவர்களின் பயணத்தை எளிதாக்கவும், அவர்களின் பயணத்தை முறையாக ஒருங்கிணைக்கவும் இந்த பதிவு இயக்கத்தை இந்திய தூதரகம் தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து குவைத் நாட்டிற்கு பயணிக்க பல மாதங்களாக தடை அமலில் இருந்து வந்த வேளையில், கடந்த ஜூன் 17 ம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட குவைத் அல்லாத வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் குவைத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது . இதனை தொடர்ந்தே தற்போது இந்திய தூதரகம் குவைத் பயணிக்கவிருக்கும் பயணிகள் தங்களின் தகவல்களை ஆன்லைன் படிவத்தில் பதிவேற்றும் வண்ணம் இணையதள லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த பதிவின் நோக்கம், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் குவைத் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் COVID-19 தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட தகவல்களை சேகரிப்பதே என்று தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குவைத் பயணிக்கவிருக்கும் இந்திய நாட்டவர்கள் https://docs.google.com/forms/ எனும் இந்த லிங்கில் சென்று தங்களின் பயணம் தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குவைத் நாட்டிற்கு பயணிப்பவர்கள் குவைத் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைசர்-பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (கோவிஷீல்டு), மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் இவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் தெரிவித்த குவைத் நாட்டிற்கான இந்திய தூதர், இந்தியாவில் கோவிஷீல்டு எடுத்த குவைத் குடியிருப்பாளர்கள், குவைத் அரசு வெளியிட்டுள்ள போர்ட்டலில் (https://vaxcert.moh.gov.kw/) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு குவைத் திரும்ப விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் இது தொடர்பான புதுப்பிப்புகளை நாங்கள் தெரியப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.