அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் தொடர்ச்சியான 5 நாட்கள் விடுமுறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருட இறுதியில் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ச்சியான ஐந்து நாட்கள் பொது விடுமுறையானது கிடைக்கவிருக்கிறது. சென்ற வாரம் வார இறுதி நாட்களோடு வியாழக்கிழமை அன்றும் பொது விடுமுறையானது அமீரகவாசிகளுக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த வருடம் முடிவதற்குள் இன்னும் ஒரு முறை தொடர்ச்சியான ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கவிருக்கின்றது.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தியாகிகளின் நினைவு நாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஐந்து நாள் நீண்ட பொதுவிடுமுறையானது வழங்கப்பட இருக்கின்றது.
அமீரகத்தில் பாதுகாப்பை நிலை நாட்ட உயிர் தியாகம் செய்த உன்னத வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக நினைவு நாளானது ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தியாகிகள் தினம் என்று அழைக்கப்பட்ட இந்த நினைவு நாள், அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தனது 49 வது தேசிய தினத்தை டிசம்பர் 2-3 அன்று கொண்டாட இருக்கின்றது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, உம் அல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்களும் ஒன்றாக இணைந்து ஐக்கிய அரபு அமீரகமாக மாறிய தினத்தை நினைவு கூறும் விதமாக தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாட்களில் அமீரகம் முழுவதும் வான வேடிக்கை, ராணுவ அணி வகுப்புகள் என பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குறிப்பாக, மற்ற பகுதிகளைக் காட்டிலும் அபுதாபியில் இந்த தினமானது வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். டிசம்பர் 2 அன்று வானில் ஜெட் விமானங்களின் வண்ணமயமான அணிவகுப்பு, வான வேடிக்கை, மற்றும் பல நிகழ்ச்சிகளுடன் அபுதாபியில் அமைந்துள்ள கார்னிச் பகுதியில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதி சாலைகள் முழுவதிலும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ஐக்கிய அரபு அமீரக அரசின் வலைத்தளத்தின்படி, இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் குடியிருப்பாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், டிசம்பர் 2 புதன்கிழமை மற்றும் டிசம்பர் 3 வியாழக்கிழமைகளில் தேசிய தினத்தை முன்னிட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமை வருவதால் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கப்பெறும். சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் தனியார் துறை நிறுவனங்களாக இருந்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.