துபாய்: 4 இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் மீண்டும் துவக்கம்..!! புதிய பேருந்து வழித்தடம் அறிமுகம்..!! இன்று முதல் ஆரம்பிக்கவுள்ள சேவைகள்..!!
அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதிகமான மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிகளவு தேவைப்படும் பொது போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மே 19 முதல் 4 இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.
இது குறித்து RTA பொது போக்குவரத்து நிறுவனம், திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷகேரி கூறுகையில், “துபாயில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் நான்கு நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்களாவன: அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபிக்கு E100, அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் அய்ன் வரை E201, Etisalat மெட்ரோ நிலையத்தில் இருந்து முவைலே, ஷார்ஜாவிற்கு E315, மற்றும் Etihad பேருந்து நிலையத்திலிருந்து ஃபுஜைரா E700” என்று அறிவித்துள்ளார்.
மேலும் மே 19 அன்று, ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து புதிய ரூட் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. F38 எனப்படும் இந்த புதிய மெட்ரோ இணைப்பு, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி வரை பல மாவட்டங்கள் வழியாக செல்லும் என கூறப்பட்டுள்ளது. இது காலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12:30 மணி வரை 20 நிமிட இடைவெளியில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூட் 50 மற்றும் ரூட் N30 சர்வதேச நகர பேருந்து நிலையம் (School of Research Science) வரை நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷகேரி இது பற்றி கூறுகையில், “RTA சில வழித்தடங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இது சர்வதேச நகர பேருந்து நிலையத்தை அடைவதற்காக, ரூட் 50 மற்றும் N30 வழியை நீட்டித்துள்ளது. மேலும் D03 மற்றும் D03A ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இனி ரூட் D03 மட்டுமே செயல்படும். அதேபோல் ஆராய்ச்சி அறிவியல் பள்ளி (School of Research Science) வழியாக செல்ல ரூட் 367ஐ நீட்டிக்கும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் “RTA எப்போதும் சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கு சிறந்த மற்றும் மிகவும் திறமையான பொது போக்குவரத்து தீர்வுகளை வழங்க ஆர்வமாக உள்ளது. துபாய் முழுவதும் பொதுப் பேருந்துகள் உட்பட பாதுகாப்பான மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து தீர்வுகளை வழங்க அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இது ஒத்துழைக்கிறது. துபாயில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் விரிவான கள ஆய்வுகளுக்கு உட்பட்ட பின்னரே இந்த சேவை தொடங்கப்படுகிறது” என்றும் ஷகேரி தெரிவித்துள்ளார்.