UAE: லாரிகள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் எமிரேட்டினுள் நுழைய தடை..!! புத்தாண்டை முன்னிட்டு அறிவிப்பு..!!
வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்க சாலை மூடல், கனரக வாகனங்களுக்கு தடை உள்ளிட்ட பல போக்குவரத்து விதிகளை அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடங்களில் ஒன்றான அல் மரியா ஐலேண்டில் உள்ள பாலங்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 வரை இரு திசைகளிலும் மூடப்படும் என அறிவித்து அதனை விளக்கி, அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஒரு வரைபடத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு அபுதாபியில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு அபுதாபி காவல்துறை தடை விதித்துள்ளது. இதில் ஷேக் சையத் பிரிட்ஜ், ஷேக் கலீஃபா பிரிட்ஜ், முசாஃபா பிரிட்ஜ் மற்றும் அல் மக்தா பிரிட்ஜ் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தடையானது டிசம்பர் 31 சனிக்கிழமை காலை 7 மணி முதல் ஜனவரி 1, 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என்று மத்திய செயல்பாட்டுத் துறைக்கான போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் யூசுப் அல்-பலுஷி விளக்கியுள்ளார். மேலும் இந்த காலப்பகுதியில் அதிக போக்குவரத்து கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் ஸ்மார்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.