துபாய்: மெட்ரோ நிலையங்களில் கூட்ட நெரிசலை சீர்படுத்த காலை மற்றும் மாலையில் புதிய நெறிமுறையை கையாளும் RTA..!!
துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கூட்ட நெரிசலை சீர்படுத்தும் வகையில் புதிய தினசரி ப்ரோட்டோகால் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவித்துள்ளது.
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய நடைமுறையான ‘crowd management protocols’ ஆனது நெரிசலான நேரங்களில் செயல்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 9.30 மணி நேரங்களிலும், அதேபோன்று மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான நேரங்களிலும் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக RTA வெளியிட்ட பதிவில், “பயணிகள் எதிர்கொள்ளும் எந்தவொரு சிரமத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதை உறுதி செய்வதே எங்கள் முதன்மையான நோக்கம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை எளிதாக கண்டுகொள்ள ரயில் நிலையங்களில் அடையாளப் பலகைகள் வைக்கப்படும் எனவும், கூடவே பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கு மெட்ரோ நிலைய ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 16 அன்று பெய்த பெருமழைக்குப் பிறகு, துபாய் மெட்ரோ இன்னும் முழு செயல்பாடுகளுக்குத் திரும்பவில்லை. கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து ஆன் பாஸிவ் (On Passive), ஈக்விட்டி (Equity), அல் மஷ்ரிக் (Al Mashreq) மற்றும் எனெர்ஜி (Energy) உள்ளிட்ட நான்கு மெட்ரோ நிலையங்கள் தற்போது வரையிலும் மூடப்பட்டுள்ளன.
ஆகவே, மெட்ரோ பயணிகள் பீக் ஹவர்ஸில் மெட்ரோவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் மெட்ரோ நிலையங்களுக்கு ஏற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறும் அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel