அபுதாபி: நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!
ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், ஆகஸ்ட் 14, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 18, வியாழன் வரை தொடர்ந்து குறைந்த வெப்பநிலையுடன் மிதமான முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அபுதாபி அரசு ஊடக அலுவலகம் பொதுமக்களை எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் வேக வரம்புகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட பதிவில் “மழை பெய்யும் போது, விழிப்புடன் இருங்கள் மற்றும் ஓடைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மழைநீர் குளங்களில் இருந்து விலகி இருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “கடல் கொந்தளிப்பு மற்றும் அதிக அலைகளின் போது, கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும் மற்றும் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக மட்டுமே வானிலை முன்னறிவிப்புகளை பின்பற்றவும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை, அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமானது (NCEMA) வரவிருக்கும் வானிலை நிலைமையை சமாளிக்க அதன் தயார்நிலை குறித்து விவாதிக்க பல்வேறு துறைகளுடன் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் கமாண்ட், தேசிய வானிலை மையம் (NCM) மற்றும் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக NCEMA செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது, வானிலை நிலவரத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நாட்டில் அதன் தாக்கம் குறித்து NCM அறிக்கை செய்தது. அதன்படி இந்த வார இறுதிக்குள் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பல்வேறு தீவிரமான மழையுடன் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வானிலை நிலைமையின் விளைவுகளைத் தணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் இக்கூட்டத்தில் மதிப்பாய்வு செய்தன.
அதனைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அமைப்புகளால் வழங்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு அனைத்து அதிகாரிகளும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.