அமீரகம் போன்று இந்தியாவிலும் அறிமுகமாகும் இ-பாஸ்போர்ட்..!
இந்தியர்கள் வேலைவாய்ப்பு, உயர் கல்வி, போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர். அதற்காக விசா, இமிக்ரேஷன் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு பல நாட்கள் என்ன, மாத கணக்கில் காத்திருக்க வேண்டி கட்டாயத்தில் இருக்க வேண்டியதுள்ளது. வெளிநாட்டில் இறங்கிய பிறகும் விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேஷனில் பல மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை தொடர்கிறது.
இதற்காக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு விதிகளின்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளை தவிர மற்ற அனைத்து நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்கிறது. இதன் மூலம் கைரேகை ஆதாரத்துடன் உள்ளடக்கிய இ பாஸ்போர்ட் அறிமுகமாகிறது.
இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கிய நாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதனால், வெளிநாடுகளுக்கான விசா பெறுவதும் இலகுவாகி விடும்.
இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘2022-23 ஆம் ஆண்டில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இ பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் பயணங்கள் வசதியாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி, விலாசங்கள் மற்றும் பெற்றோர் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆதார் எண்கள் கூட இடம் பெறவில்லை. இதனால் பலர் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய இ பாஸ்போர்ட் பயன்பாட்டிற்கு வந்தால் ஈது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.