UAE: தொடர்ந்து கோளாறு கொடுக்கும் SPICEJET விமானங்கள்.. புதிய கட்டுப்பாடு விதித்த விமான போக்குவரத்துத்துறை..!
கடந்த மே 4ஆம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்சனை காரணமாக தரையிறக்கப்பட்டது. ஜூலை 5ஆம் தேதி ஒரே நாளில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 8 சம்பவங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நிகழ்ந்துள்ளது. இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் சார்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுவதாகவும் புதிய கட்டுப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2021 முதல் ஜூன் 30, 2022 வரை என கடந்த ஓராண்டில் மட்டும் விமானம் சார்ந்து சுமார் 478 தொழில்நுட்ப கோளாறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.