அமீரக செய்திகள்

அமீரகத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெள்ளம் ஏற்படும் அபாயம்.. NCM அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஒரு சில தினங்களாக வெயிலும், ஆங்காங்கே லேசான மழையும் என நாடு முழுவதும் வானிலை மாறி மாறி நிலவி வருகின்றது. இவ்வாறு நிலையற்ற வானிலை தற்பொழுது அமீரகத்தில் நிலவி வரும் பட்சத்தில், அடுத்த மூன்று நாட்களில் அமீரகத்தின் பல்வேறு இடங்களில் தீவிரமான மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள முன்அறிவிப்பில் சில பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. மேலும் கனமழை அதிகம் பெய்யும் இடங்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் NCM கூறியுள்ளது.

அதே நேரத்தில் பலத்த காற்று கிடைமட்ட பார்வையை (visibility) குறைக்கும் எனவும், இந்த வானிலை மாற்றங்கள் இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 15) பிற்பகல் முதல் புதன்கிழமை (ஏப்ரல் 17) அதிகாலை வரை இருக்கும் எனவும் தேசிய வானிலை மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சமயங்களில், மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் காற்று தூசியை ஏற்படுத்தி, பார்வைத்திறனைக் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக வீசும் காற்றால் கடல் சீற்றமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வானிலை மையம் இவ்வாறு தகவல் வெளியிட்டிருக்க அண்டை நாடான ஓமானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, வாகனங்களில் சிக்கிக்கொண்ட குடியிருப்பாளர்கள் அவசர மேலாண்மைக் குழுவினர்களால் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!