UAE: தடுப்பூசி போடாதவர்களில் குறிப்பிட்ட பயணிகள் அமீரகம் திரும்பலாம்..!! விதிமுறைகள் என்ன..??
இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையானது செல்லுபடியாகும் ரெசிடென்ட் விசா உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5 முதல் அமீரகத்திற்குப் பயணிக்கலாம் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமீரகத்திற்குப் பயணிக்கும் குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டு டோஸினையும் போட்டிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டு குறைந்தது 14 நாட்கள் முழுமையடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர்த்து குறிப்பிட்ட பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லையென்றாலும் அமீரகத்திற்கு வர அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் மருத்துவப் பணியாளர்கள், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகத்திற்கு பயணிக்கும் சூழ்நிலை உள்ள குடியிருப்பாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் மத்திய அல்லது உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகள்
பயணிகள் ICA விடம் இருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்
பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறையான முடிவை வைத்திருக்க வேண்டும் மற்றும் அதற்கான சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும்.
கூடுதலாக, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன் ரேபிட் கோவிட் சோதனை நடத்தப்படும். அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கும்போது ஒரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.